ஆர்யன் கூறிய வார்த்தைகளில் மொத்தமாக சிதிலம் அடைந்து போயிருந்தாள் ஜான்வி.
எப்போது அவன் அறையை விட்டு வெளியே வந்தாளோ.. அவள் இடத்தில் வந்து அமர்ந்தாளோ.. கண்கள் கணினியை மொய்க்க அதிலிருந்த எழுத்துக்கள் தெரியாத அளவிற்கு கண்ணீர் திரையிட்டு நின்றது. ஒன்றையும் பார்க்க முடியவில்லை.. உள்ளுக்குள்ளிருந்து எழுந்த பேரழகி ஒன்று அவளை வாரி சுருட்ட ஆரம்பித்தது..
என் ஆரி.. என் ஆரி.. ஒருமுறை நான் சொல்ல வர்றதை முழுசா கேட்டிருந்தா கண்டிப்பா அப்படி ஒரு முடிவை எடுத்து இருக்க மாட்டான்.. என இத்தனை வருடமாய் அவள் கட்டி வைத்திருந்த நம்பிக்கையை ஒரே வார்த்தையை கடற்கரையின் மணல் வீடாய் உடைத்துப் போட்டிருந்தான்..
அதிலும் அண்ணன் பெண்ணை பார்க்கலாமா என மணிமேகலை கேட்டபோது தன்னை ஓரக்கண்ணால் பார்த்தபடியே சரி என்று கூறினானே.. அப்படி என்றால் அவன் மனதில் நான் இல்லையா..
ஆனால் என்னை நினைத்து தான் அவன் இவ்வளவு வருடமாய் கல்யாணத்தை தவிர்க்கிறான் என மணிமேகலை கூறியதை கேட்டேனே...
ஐயோ... வின்வின்னேன தெறித்த முன்னந்தலையை அழுத்தி பிடித்தாள்..
கனவில் கூட நிம்மதியான மகிழ்ச்சியான வாழ்வாய் தோன்றியது இப்போது நிதர்சனத்தில் வேப்பங்காய் கசந்ததில் உள்ளுக்குள் அமில சுரப்பு.
" அன்னைக்கு என்ன நடந்துச்சுன்னு சொல்லிட்டு என் காதல அவன் கிட்ட சொல்ல எவ்வளவு ஆசையோட போனேன்.. ஆனா எதையுமே காதில் வாங்காம அவன் கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னதோட என்னையும் அசோக்கையும் சேர்த்து வச்சு இப்படி தரக்குறைவா பேசிட்டானே.. ''உள்ளம் உள்ளுக்குள் தாறுமாறாய் நொறுங்கி உடைந்தது.
" ஏன் ஆரி.. என்னை ஏன் புரிஞ்சுக்கவே மாட்டேங்குற.. உன்ன தவிர நான் வேற ஒருத்தனை மனசால கூட நினைச்சதில்லையே.. என்ன போய் இப்படி கீழ்த்தரமா பேச உனக்கு எப்படி மனசு வந்துச்சு.. " மானசிகமான கதறலை சமாளிக்க முடியாமல் சிக்கி தவித்தாள் பேதை.
மனம் ஒரு நிலையில் இல்லை.. வேலையிலும் கவனம் செலுத்த முடியவில்லை.. இவ்வளவு நாளாய் கற்பனை எனும் நூல் பிடித்து நிம்மதியாகவாவது வாழ்ந்தவளுக்கு இப்போது நிதர்சனத்தில் அதையும் தொலைத்து விட்டிருந்த உணர்வு.. அவன் வார்த்தைகளிலும் இனி நடக்கப் போவதாய் கேட்ட விஷயங்களிலும் செத்துப் பிழைத்தாள்..
" தன் கூறப்போவதை என்றுமே கேட்கப் போவதில்லை என்பதை ஆணித்தரமாய் நிரூபித்து விட்டானே.. இன்னும் சில நாட்களில் அவனுக்கு கல்யாணமாம்.. இன்னொரு பெண்ணுடன்" நினைக்க நினைக்க உள்ளம் நடுங்கியது.. தொலைவில் இருந்து போது மண்டி கிடந்த காதல் இப்போது அருகில் வெற்றிடமாய் உருவெடுத்தது..
அவள் மனதை படித்தானோ.. ஹலோ.. வெகு அருகில் கேட்ட குரலில் அவள் விழிகள் மட்டும் மேல் எழுந்தன. அழுகையையும் சோகத்தையும் துடைத்த அவள் மனதைப் போல வெற்றிடமான விழிகள் எதிரில் நின்றவனை அழுத்தமாய் பார்த்தது. ஆனால் அதுவும் கூட அவனை அசைக்கவில்லையே.
" இப்படி சும்மா உக்காந்து பெஞ்ச தேய்க்கிறதுக்காக தான் ஆபீஸ் வர்றீங்களா.. " எடுத்த எடுப்பில் அவன் குரல் உயர்ந்தது.
" ஏன் என்னை இப்படி கஷ்டப்படுத்திக்கிட்டே இருக்கான்.. உண்மையா காதலிச்சவனால இப்படி வலிக்க வலிக்க அடிக்க முடியுமா.. " வார்த்தையோடு எழுந்த வலியை உள்ளுக்குள்ளேயே அடக்கினாள்.
எப்போதும் ஏதாவது கூற வாய் எடுப்பவள் இப்போது மௌனமாய் விழி அகற்றாமல் தன்னையே பார்த்துக் கொண்டிருந்ததில்.. அடுத்து கத்த கிடைக்காத வாய்ப்பில் எரிச்சலோடு முகத்தை சுளித்து.." சும்மா எங்கேயாவது வெறிக்க வெறிக்க பாக்காம உட்கார்ந்து வேலையை பாருங்க.. " கூறி விட்டு சென்று விட்டான்.
"ஜான்வி.." அவள் தோளில் கை வைத்தாள் திவி. நிர்மலமான விழிகளோடு திரும்பியவளை கண்டு துணுகுற்றவள்.. "விடு ஜான்வி அவர பத்தி தான் நம்ம எல்லாருக்கும் தெரியுமே.. வந்ததுல இருந்து பொரிஞ்சு மட்டும் தானே தள்ளிக்கிட்டு இருக்கார்.. நீ எனக்கு சொல்றது தான்.. அத பெருசா எடுத்துக்காத.."என அவள் தோள் தட்டி ஆறுதல் மொழியாய் கூறிவிட்டு தான் அவன் கண்களில் பட்டுவிடுவதற்குள் திரும்பிக்கொண்டாள் திவி..
ஆனால் அவன் வார்த்தைகளில் இருந்து அவ்வளவு எளிதாய் வெளிவர முடியாமல் நெஞ்சத்தை பழுக்க காய்ச்சிய கத்தியால் கீறிவிட்டது போல் வலி கண்டு கொண்டிருந்தாள் இங்கு ஒருவள் ..
"எவ்வளவு பழி வெறி.. கோபம்.. எவ்வளவு அன்போட இருந்த நீ ஏன் இப்படி மாறிப்போன ஆரி.." வார்த்தைகளில் துடித்தாள்.
பார்வை மேல் எழுந்து தன் முன்னிருந்த கம்ப்யூட்டரில் குவிந்தது.
ஒருமுறை வேலையில் ஆழ்ந்து விட்டால் சிந்தை போக்கு மாறிவிடும் என எவ்வளவு முயன்றும்.. மீண்டும் மீண்டும் அவனுக்கு திருமணம் திருமணம் என உள்ளம் போட்ட கூச்சலின் கடினமான வார்த்தைகளில் இருந்து வெளிவரவே முடியவில்லை.. இப்போதே ஏதாவது பெரிய மலை உச்சிக்கு சென்று தன் ஆதங்கம் தீரும் வரை ஆஆஆஆவென இடத்தை அடைக்கும் அளவிற்கு கத்தி விட துடிப்பு.. தன் கையலாகாத்தனத்தை நினைக்க நினைக்க ஆற்றமை.. அனைத்தும் பொங்கி வந்தது.
திடீரென போன் ஒலிக்க.. எப்போதும் வேலை நேரத்தில் அவாய்ட் செய்து விடுபவளால் இன்று முடியாது போனது.. இப்போது தன் மனதை மாற்ற நிச்சயம் ஏதாவது ஒரு துருப்பு சீட்டு வேண்டும்..
அவசரமாய் யார் என்றும் கூட பார்க்காமல்.. கம்பெனி காலாக இருந்தால் கூட அந்த வார்த்தையை இரண்டு நொடி கேட்டு விடலாம் என அழைப்பை உடனடியாய் ஏற்று காதில் வைத்திருக்க.. ஹலோ ஜான்வி.. எதிர்பக்கம் இருந்து அசோக்கின் கம்பீரமான.. அதே நேரத்தில் அமைதியான குரலில்..
"அஷோக் நீயா.." கேட்டவளின் கருமணிகள் உருண்டன.. வழக்கமாய் வேலை நேரத்தில் அழைக்காதவன் அழைத்திருக்கிறானே.. ஒருவேளை..
" பாப்பா ஸ்கூல்ல இருந்து எதுவும் கூப்பிட்டாங்களா" நூலிழையில் பொங்கும் பாலாய் சட்டென தன் துயரம் மறந்து பதட்டத்தோடு கேட்டான்.
"இல்லையே.. நான் போன் பண்ணாலே பாப்பாவை பத்தி பேச தான் இருக்கணுமா.." நிதானமாய் கேட்டான் அவன்.
"பின்ன வேற எதுவும் விஷயமா.. சொல்லு அசோக்.." அவன் பேச்சில் கவனமானாள்.
"ம்ம்ம்.. வேலை முடிஞ்சது.. அதான் சும்மா உன்கிட்ட பேசலாமேன்னு கூப்பிட்டேன்.." அவன் குரலுக்கு கொஞ்சமும் பொருத்தமில்லாது தயங்கி தயங்கி அவன் பேசிய விதத்தில்..
" இது என்ன புது பழக்கம்.. " மெல்ல அவள் இதழில் சிரிப்பு எட்டி பார்த்தது.
"ப்ச்.. என்னன்னு தெரியல உன் கிட்ட பேசணும் போல இருந்துச்சு.. சரி பேசிட்டேன்.. ஹான் கேக்க மறந்துட்டேன் பாரு.."
"என்ன.. " என்றவளுக்கு காலையில் அவன் கூறி சென்ற விஷயம் ஞாபகம் வர.. அவனிடம் நான் பேசிட்டேனா.. அவன் என்ன கூறினான் என கேட்க போகிறானா.. விஷயத்தை அவனிடம் கூறினால் எப்படி எடுத்துக் கொள்வான்.. என ஏதேதோ யோசனைகளோடு கண்மணிகள் உருள அமர்ந்திருந்தவளிடம் அவன் பேசிய வார்த்தையின் அழுத்தம் சற்று மட்டுப்பட்ட உணர்வு...
" வேலையெல்லாம் எப்படி போகுது.. ஒழுங்கா வேலை பாக்கறியா இல்லையா.. " கேட்டியிருந்தான் மாற்றுக் கேள்வியாய்..
" அப்படியானால் அதைப் பற்றி கேட்க வரவில்லையா.. அவன் கேட்கவில்லை என்றால் என்ன.. தானே கூறி விடலாமா என அவள் ஆரம்பிப்பதற்குள்.. " சரி.. சரி.. நல்லா வேலை பாரு.. இந்த மாசம் கேலண்டர்ல நோட் பண்ணி வச்சிருக்கியே 3000 இன்சென்டிவ் வாங்கணும்னு.. அதை ஞாபகம் வச்சு ஒர்க் பண்ணு.. சொன்னபடி அதை அச்சீவ் பண்ணிட்டேனா நான் உனக்கு ட்ரீட் தரேன்.. " என்றான்.
புது விதமான அவன் பேச்சிலும் அவனே அதை வளர்த்துச் செல்வதிலும்.. " நான் இன்செண்டிவ் வாங்குனா நீ ட்ரீட் தருவியா.. இது புதுசா இருக்கே.. " புருவம் சுழித்தாள்.
"ஆமா.. இன்சென்டிவ் வாங்கி எப்படியும் எங்களுக்கு தானே செலவு பண்ண போற நீ.. அதுக்காக தான் ட்ரீட் " அவன் கூறியதிலேயே இதெல்லாம் அண்டப்புளுகு ஆகாச புளுகு என அவளுக்கு தெளிவாக புரிந்தது..
தன்னை கண்டெடுத்த நாட்களில் இருந்து அவன் தானே ஒவ்வொன்றையும் தனக்கும் தன் பிள்ளைக்கும் பார்த்து பார்த்து செய்து கொண்டிருக்கிறான்.. கண்டெடுத்து.. ஆம்.. இதழினில் எட்டிப் பார்த்த புன்னகை இப்போது ஆகாசமாய் விரிந்தது..
" ஓகே.. பொழுது போகலன்னு கால் பண்ணேன்.. நல்லபடியா டைம் பாஸ் பண்ணிட்டேன்.." அவன் முடிக்க.
" அப்போ டைம் பாஸ்க்காக தான் போன் பண்ணியா" குரலில் கோபத்தைக் கொண்டு வர முயன்று தோற்றாள். இந்த இதழ்கள் இன்னும் ஏன் சிரிப்பிலேயே நிற்கிறது.??
" இல்லையா பின்ன கிளம்பறதுக்கு முன்னாடி உன் வாய்ஸ் கேக்கணும் போல இருந்துச்சு.. அதான்.. " அவசரப்பட்டு உண்மையை உளறி விட்டது போல் உடனடியாய் ஃபோனை துண்டித்து விட்டான்..
அழைப்பு துண்டித்து விட்டது என தெரிந்தும் அப்படியே காதில் வைத்திருந்தாள் அவள்.. என்ன கூறினான் இப்போது இவன்.. என் குரல் கேட்கவா.. அப்படி கேட்பதற்கு இது ஒன்றும் பாடகி ஜானகி அம்மாளின் குரலோ.. சுசிலாவின் குரலோ இல்லையே.. சாதாரண ஜான்வியின் குரல்.. " அவன் முடித்திருந்த வாக்கியத்தில் அவளையும் அறியாமல் உள்ளம் மலர தான் செய்தது.
இன்னும் காதிலிருந்து எடுக்கப்படாத போன் கிர் என அதிர எடுத்து பார்த்தாள்.. அசோக் என்ற பெயரில் இருந்து மெசேஜ்.. புன்னகையுடனே திறந்து உள்ளே நுழைய.. " ஈவினிங் லேட் ஆகிற மாதிரி இருந்தா போன் பண்ணிடு.. நான் வந்து கூட்டிட்டு போறேன்.. அதோட பாப்பாவையும் நான் கூட்டிட்டு வந்துடறேன்.. நீ ரிலாக்ஸா வேலைய பாரு.. என்றதோடு அவன் செய்தி முடிந்திருக்க.. அவளையும் அறிய முடியாத மகிழ்வொன்று அவள் நெஞ்சை நிறைத்தது.
இதுவரை மனதில் குழப்பிக் கொண்டிருந்த குழப்பங்களும் சஞ்சலங்களும் ஒட்டுமொத்தமாய் அனலைக் கண்ட பனித்துளியாய் விலகிப் போயிருந்ததில்.. வேலையில் மூழ்கினாள்.
இடைவேளை நேரத்தில் திவி தட்டி அழைத்த போது தான்.. ஹ.. ஹான்.. நினைவு கொண்டு திரும்பினாள் ஜான்வி.
அவன் திட்டிய போதே மனதில் வைத்துக் கொள்ளாதே என ஆறுதல் கூறியிருந்தாலும் தோழியின் தெளிவடையாத முகத்தில் சற்று துணுக்குற்ற இருந்தவள்.. இப்போது அவள் முகத்தில் சஞ்சலங்கள் எதுவும் காண முடியாததில்.. தலையை இடம்வலமாய் ஆட்டி எட்டிப் பார்த்தாள்.
என்ன பாக்குற.. தானும் தன் பங்குக்கு தலையை திருப்பி பின்னால் பார்த்தாள் ஜானவி.
"அடியே.. அங்க என்ன பாக்குற.. நான் உன்ன தான் பாக்குறேன்.." அவள் தாடை பற்றி தன் முகம் பார்க்க வைத்தாள் திவி.
"என்ன.."
" அப்போ அந்த சுரைக்காய்.. அவள் ஆரம்பிக்க..
என்ன சுரைக்காய்.. அவசரப்பட்டு கேட்டிருந்தவளிடம் விழித்து.. சொல்லு டி.. என்ற அவள் உந்துதலில் பேசினாலே சொர சொரனு ரகர் டா வார்த்தை விடுறாரே அவர்தான் சுரக்கா.. என்றபடி பக்கப்பாட்டில் எட்டிய அவள் வேலைகள் மீதி கதையை கூற.. அவள் திரு திரு முழியில் சட்டென சிரித்து விட்டிருந்தாள் ஜான்வி.
" அப்பாடா.. எங்கே அப்படியெல்லாம் பேசக்கூடாதுன்னு திட்டிவியோன்னு நினைச்சேன்.. " என் இரு கரங்களையும் நெஞ்சில் வைத்து பெருமூச்சு விட்டு.. " சரி அத விடு.. அந்த சுரைக்காய் உன்னை திட்டிட்டு போனப்ப அவ்வளவு அப்செட்டா இருந்த.. நான் கூட பிள்ளையே முகம் மாறிட்டான்னு வேலையோட வேலையா எவ்வளவு கவலைப்பட்டேன் தெரியுமா.. " என்ற படி கடைசி வாய் பிரட் துண்டையும் எடுத்து வாயில் அதக்கி கொண்டவளை ஒரு மாதிரியாய் பார்த்து வைத்தாள் ஜான்வி..
"அட உண்மையா தான் .. இப்படி மொக்கிறதால அதெல்லாம் இல்லன்னு நினைச்சுடாத நீ.. உண்மையாவே உன்னை நினைச்சு ரொம்ப கவலைப்பட்டேன்.. அதுல தான் பசி கொஞ்சம் கூட ஆகிடுச்சா.. நான் வேற ஸ்கூல் காலேஜ் எல்லாத்துலயும் லாஸ்ட் பென்ஞ் வேற.. உட்கார்ந்து சாப்பிட்டு சாப்பிட்டு பழக்கம் ஆகிடுச்சு.. அதான் பேக்ல இருந்தத வாய்க்குள்ள அமிக்கிட்டு உட்கார்ந்துட்டேன்.. " என அவள் பார்வைக்கு பதில்மொழி கூறி
"அதை விடு.. நீ சொல்லு.. நான் உனக்காக அவ்வளவு ஃபீல் பண்ணிட்டு இருந்தா நீ எப்படி அதுக்குள்ள இவ்வளவு கூலான.. அந்த மனுஷன் கத்திட்டு போனதுல எனக்கே மனசு கஷ்டமா இருந்துச்சே.. உனக்கு இல்லையா.. " கேட்டபடி ஆர்வமாய் முகம் பார்த்தவளின் கேள்விக்கு முன்.. என்றும் இல்லாத அதிசய நாளாய் அசோக்கே போன் செய்ததும்.. பேசியதும் தொடர்ந்து அனுப்பிய குறுஞ்செய்தியும்.. அவள் இதழுக்குள் சிறு புன்னகையை படரவிட்டது.
"நா என்ன கேக்குறேன்.. இவ என்ன பண்றா.. " என்ற ரீதியில் விழித்தவள் தற்செயலாய் அவள் போனை எடுத்து நோண்ட முன் வந்திருந்த அசோக் மெசேஜை கண்டு.. "இதுதான் காரணமா நான் கண்டுபிடிச்சிட்டேன் '' விழி விரித்தாள் திவி..
"ஏய்.. என் போனை எடுத்து என்னடி பண்ற.. "என வாங்க முற்பட்டவளிடம் போனை தனக்கு பின்னால் மறைத்து.. " "உன் ஹஸ்பண்ட் ஒரு மெசேஜ் போட்டதும் மேடம் அப்படியே குளிர்ந்து போயிட்டீங்க.. அதானே.. " கண்ணடித்தாள்.
"அ.. அப்படி எல்லாம் இல்லை.." ஜான்வி கூற வந்ததை அவள் காதில் வாங்கியதாய் தெரியவில்லை.
"ஆனாலும் எனக்கு உன்ன பாத்தா பொறாமையா தான் இருக்கு ஜான்வி.. உன் ஹஸ்பண்ட் உன் மேல எவ்வளவு அட்டாச்மென்டா இருக்காரு.. நேத்து ஒரு நாள் லேட்டாகிடுச்சுங்கறதுக்காக மெனக்கெட்டு லேட் ஆகுற மாதிரி இருந்தா கூப்பிடுன்னு மெசேஜ் பண்ணி வச்சிருக்கார்.. எனக்கெல்லாம் எங்க வீட்டில மாப்பிள்ளை பாக்குறாங்கன்னா முதல்ல என் மேல இவ்வளவு கேரிங்கா இருக்கிற மாப்பிள்ளை தான் வேணும்னு கேட்பேன்.. ரியலி ரொம்ப கொடுத்து வச்சவ நீ.." அவள் மனதில் பட்டதை அவள் கூறிக் கொண்டிருந்த வேளையில்.. காபி.. கேட்ட குரலில் இரு உனக்கும் சேர்த்து எடுத்துட்டு வரேன்.." திவி ஓடி போனாள்..
அவள் விட்டுப் போன தன் மொபைலை எடுத்தவள் அதன் திரையை ஆன் செய்ய கரம் மேலிருந்த டேப்பை கீழ் இழுத்தபடி அதில் இன்னும் நின்று கொண்டிருந்த அவன் மெசேஜை பார்த்தது... இதழ்கள் புன்னகைக்க.. " ஆமா ரொம்ப கேரிங்கானவன் தான்.. ஆனா கணவன் கிடையாது... தோழன் டி.. " என்றாள் மனதார நிறைந்த நன்றி பெருக்கில் அழுத்தமாய் புன்னகைத்து..
கருத்துகள்
கருத்துரையிடுக